நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
[2026-06-12 11:16:01] Views:[49]
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.15ஆம் திகதி தொடக்கம் 2025.06.30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், கடந்த திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும், குறிப்பாக கடற்போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.பா ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ்.கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் திரு.கே.சரவணபவானந்தன், வேலணை பிரதேச செயலாளர் ரி.அகிலன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்ககள் என கூறப்படுகிறது.










