மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை.
[2026-07-22 19:21:09] Views:[32]
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.










