நவீன வசதிகளுடன் புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்காக..!
[2024-05-04 21:52:27] Views:[339] அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய தொடருந்து பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகின்றது.
இது தொடர்பாக மதுரை தொடருந்து நிர்வாகம் கூறியதாவது, “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் தொடருந்து பாலம் 110 ஆண்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்புகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலையால் தொடருந்துகள் 2KM பாலப்பகுதியில் மணிக்கு 10KM வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டது.
பராமரிப்பிற்கென தொடருந்து போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், நவீன வசதிகளுடன் 550 கோடி ரூபா செலவில் புதிய பாலம் கட்ட தொடருந்து வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8KM நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்படுகிறது.
நடுவிலுள்ள 72.5M நீளமுள்ள பகுதி செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைகிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் விதமாக நடுவிலுள்ள லிப்டிங் கிர்டர் 17M உயரத்துக்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்துக்கு இணையான உயரம் ஆகும். நவீன வசதிகளுடன் தீவிரமாக முன்னெடுக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.