அரசியல் மயமாகக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
[2024-05-10 15:27:40] Views:[237]
ஆரம்ப காலத்தில் உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நினைவேந்தல்கள் தற்போது அதே உணர்ச்சி பெருக்கோடு பின்பற்றப்படுகின்றதா என ஆராய்ந்து பார்க்கும்போது நிச்சயமாக இல்லை என்பதை எவரொருவராலும் மறுக்க முடியாது.
காரணம் என்னவென்றால் தற்போழுது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றிலும் எமது தமிழ்அரசியல்வாதிகளினால் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் உள்வாங்கப்பட்டு புனித தன்மைக்கு கலங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனக்கூறி அரசியல் செய்யும் எமது தமிழ் அரசியல் தலைமைகளே! நீங்கள் எல்லோரும் எமது மக்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இருந்தபோது எங்கிருந்தீர்கள்? வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொண்டு கூத்தடித்த நீங்கள் தற்போது எங்கள் மக்களின் வலிகளைப் பற்றி பேசுவதற்கு தகுதியுள்ளவர்களா? என்பதை முதலில் சிந்தியுங்கள்.
யுத்தத்தை நிறுத்த எமது தமிழரசியல்வாதிகள் எவரும் முயற்சிக்கவில்லையே ! ஆனால் இப்போது மட்டும் ஏன் அரசியல் பிழைப்பிற்காக நாடகம் ஆடுகிறீர்கள். இவர்களே எமது இனத்தின் உண்மையான துரோகிகள் .
இத்தனை வருட காலமும் எமது மக்களின் வலிகளை வைத்து நீங்கள் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்? ஆனால் உங்களின் அரசியலினால் நீங்கள் எமது தமிழ் மக்களுக்காக எதையும் சாதித்ததாக புலப்படவில்லையே.
எமது தமிழ் அரசியல் தலைமைகளே! இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கோ அல்லது யுத்தத்தில் கலந்து கொண்டு ஊனமடைந்த முன்னாள் போராளிகளுக்கோ இதுவரை எந்தவொரு நன்மையும் பெற்று கொடுக்காமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு மட்டும் வந்து நினைவு கூர்வதால் எம் மக்களின் அவலநிலை மாறிவிடுமா என்ன ?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பது தமிழ் அரசியல் கட்சிகளுக்கோ இந்தியா மற்றும் மேற்குலகிற்கு ஒருமுகமும் அரசியலுக்காக வடக்கு மற்றும் தெற்கிற்கு இன்னொரு முகமும் காட்டி மிகக் கீழ்த்தரமான அரசியல் நடத்துபவர்களுக்கோ சொந்தமானது இல்லை என்பதே நிதர்சனம்.
சுயநல அரசியலுக்காக பதவிக்காக எமது தமிழ் மக்களின் அரசியலை சிதைக்கும் பிழையாக வழி நடத்தும் அரசியல் கோமாளிகளுக்கும் குருட்டு வழிகாட்டிகளுக்கும் சொந்தமான நாள் அல்ல. உண்மையில் இழப்புகளின் வலி சுமந்து வாழும் எமது தமிழ் தாய்மார்களுக்கு சொந்தமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எமது தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் தலைமைகளாக எண்ணிக்கொண்டு அரசியலுக்கு மட்டும் தமிழர் அரசியல் பேசுவோர்க்கு மத்தியில் நினைவேந்தலை யார் நடத்த வேண்டும் என்ற தெளிவின்மை காணப்படடுகின்றது. இவர்களின் நாடகத்தினால் யார் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பங்குப்பற்றுவது என குழப்பகரமான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளபட்டுள்ளனர். தயவுசெய்து எமது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை உங்கள் அரசியல் மேடையாக்க வேண்டாம்.
15 வருடங்கள் கடந்து விட்டோம்..நினைவு கூர்வது தவறில்லை ஆனால் உங்களின் அரசியலுக்காக அவை பற்றிய எதிர்மறை கருத்துக்களை இனிவரும் எதிர்கால சந்ததியினரின் மனதில் இப்போதே விதைத்து மீண்டும் இனவாதத்திற்கு உயிர் கொடுக்க வேண்டாம்.
எம்மிடம் இருந்து விடைப் பெற்ற உறவுகளுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றிணைந்தோ அமைதியான முறையில் மனதார அஞ்சலி செலுத்துவோம்.










