தலைகீழாக மாறியுள்ள தமிழ் தேசிய கட்சிகள் !
[2024-09-02 11:27:12] Views:[298] தமிழ் கட்சிகளுக்கு இடையே தற்போது மிகப்பெரிய குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது. பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதா என்ற குழப்ப நிலையில் கட்சிகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்களால் இன்னமும் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க தெரியவில்லை.
சொல்லப்போனால் தேர்தல் விடயத்தில் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது. ஏற்கனவே இலங்கை தமிழரசு கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் தற்போது ரெலோ கட்சியும் இரண்டாக உடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரெலோ கட்சியின் வினோதரலிங்கம் ஒரு பக்கமும் ஏனையோர் பொது வேட்பாளர் பக்கமும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். தற்போது வினோதலிங்கத்தின் மீது கட்சி சார்பாக குற்ற ப் பத்திரிக்கை கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் தேர்தலை புறக்கணிக்குமாறு வடக்கின் பிரதான தமிழ் கட்சியொன்று ஒரு சில செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.பொது இடங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மக்களுடன் கலந்துரையாடி மக்களை மேலும் குழப்பி வருகின்றது.
சிந்தித்து பாருங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை புறக்கணிக்க சொல்வது சரியா ? தேர்தலை புறக்கணிப்பதால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைத்துவிடுமா ? ஒரு நாட்டின் பிரஜை என்று தன்னை உறுதி செய்யும் அடையாளமே வாக்குரிமையாகும். அதனை பறித்தல் மிகப்பெரிய உரிமை மீறலாகும் .இவர்களின் அரசியலுக்காக மக்களின் உரிமையை பறிப்பது ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா?
பொது வேட்பாளரை களமிறக்குவதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு காட்டலாம் என நினைத்து அக்கருத்தியலை கொண்டுவந்தனர். ஆனால் தற்போது நிலைமையோ தலைகீழ்..!
தமிழ் கட்சிகளுக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டு ஒரு சில கட்சிகள் வெவ்வேறு அணிகளாக இயங்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத போது இவர்கள் எவ்வாறு ஒருமித்து தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரப் போகிறார்கள் என்பதை சர்வதேசம் தற்போது நன்கு விளங்கிக் கொள்ளும்.
ஈழ மக்களின் உணர்வுகள் அனைத்தையும் எமது தமிழ் அரசியல்வாதிகள் அரசியலாக்கி பழகிவிட்டனர். இவர்களுக்கு எம்மக்களின் ஜனநாயக வாக்குரிமையும் ஒருவகை அரசியல் தான் . காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்ட நகர்வுகளின் பின்னணியில்கூட ஒரு மறைமுக அரசியலே ஒழிந்துள்ளது. இவை அனைத்தும் மாற வேண்டும். இவர்களின் அரசியல் கண்துடைப்புகளுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவை அனைத்தும் மாற வேண்டுமெனில் இளம் சமுதாயத்தினரிடம் அரசியல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதனூடாக எமது தமிழ் தேசியம் மற்றும் தாயகத்தின் தலைவிதி மாற்றம் காணும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் நிலைப்பாடு. எமது நிலைப்பாடும் அதுவே !