தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! யாழ் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்!!
[2025-01-11 12:19:57] Views:[125] இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
குறித்த கடற்றொழிலாளர் திருவடிநிலை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.
இதன்போது அவரிடம் இருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில், ஆறு வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் கருத்து தெரிவிக்கையில்;
நேற்று முன்தினம் 10 மணியளவில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. இப்பொழுது கடற்றொழில் பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலைகளை வாங்கி தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன். வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார். அதுபோல அரசு மற்றும் கடற்றொழில் அமைச்சர் தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எனக்கு இழப்பீடினை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும்“ என்றார்.