முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 33 வருடங்கள் நிறைவு..!
[2024-05-21 21:36:04] Views:[251] இன்றைய தினம் இலங்கை, இந்திய நாடுகளின் வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தால் நிரம்பப் பெற்ற ஒரு நாளாகும். அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் தான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலினால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். 33 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் இன்றும் மாறவில்லை.
இச்சம்பவமானது சர்வதேச ரீதியாக எமது தாய் நாட்டின் பெயரை கறை படிய செய்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சம்பவத்தின் பின்னர் இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்குமான இணைப்பு சற்று குறைய தொடங்கியது என்றே கூறலாம்.
இந்தியாவிலிருந்து எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் பல கைவிட்டுச் சென்றன. ஒருவேளை ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பின் அழிவு கூட நிகழ்ந்திருக்காது. எமது ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பல்வேறு உதவிகள் கிடைத்திருக்கும்.
உதாரணமாக 1987ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வடமராட்சி இராணுவ நடவடிக்கைகளால் யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்ற முற்பட்ட வேளையில் ராஜீவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி அம்மையாரின் பணிப்புரைக்கமைய அங்கிருந்த மக்களுக்கு வானூர்திகளின் மூலமாக உணவு வழங்கப்பட்டதுடன் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது.
விடுதலை புலிகளின் மிலேச்சத்தனமான செயலால் இந்தியாவிலிருந்து எமக்கு கிடைக்கவிருந்த பல்வேறு நன்மைகள் கைவிட்டுச் சென்றன. இதுவொரு வரலாற்று பிழை என்றே கூறலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு பயிற்சி அளித்த இந்திய நாட்டின் மிக முக்கிய தலைவரை கொலை செய்தமை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இதனாலேயே விடுதலைப்புலிகள் மீதான தடையானது இன்று வரை இந்தியாவால் நீக்கப்படாமல் இருக்கின்றது.