நடுவானில் திடீரென குலுங்கிய விமானம் - பயணி ஒருவர் பலி..! 30 பேர் படுகாயம்:
[2024-05-22 12:18:43] Views:[277] லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று (20) புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த விமானம் வங்காள விரிகுடாவைக் கடந்த சில நிமிடங்களில், அதன் பயண உயரத்திலிருந்து 6,000 அடி (1,800 மீ) கீழே இறங்கியதாகவும், இதற்கு காரணம் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் எனவும் விமான கண்காணிப்பு தரவு தெரிவிக்கிறது.
உயிரிழந்த பயணி பிரித்தானிய பிரஜை என தகவல் வெளியாகியுள்ளதாகவும், உயிரிழந்தவருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.