பொதுவேட்பாளர் நாடகம் யாருக்காக?
[2024-06-10 10:25:38] Views:[219] தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பொது வேட்பாளர் தொடர்பான கருத்துக்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது . எமது தமிழ் தேசிய நீரோட்டத்தில் எமது அரசியல் ரீதியான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எமது தமிழ் அரசியல் கட்சிகள் இம்முறை முன் வைத்திருக்கும் யோசனைதான் தான் தமிழ் பொது வேட்பாளர் எனும் யோசனையாகும்.
எமது தமிழ் அரசியல் சித்தாந்தத்தில் தமிழருக்கான தீர்வு என்பது எட்டப்படக்கூடிய சூழ்நிலை பலமுறை கையில் கிடைத்திருந்த போதும் அதனையெல்லாம் நழுவ விட்டுவிட்டு தற்போது பொது வேட்பாளர் என்னும் பகடையை எமது தமிழ் அரசியல் தலைமைகள் நகர்த்தியுள்ளனர்.
எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் இன்று வரை கண்டுகொள்ளாது விட்டு தற்போது இவ்விடயத்தை அவர்கள் முன்னிறுத்தியிருப்பது எதற்காகவென்றால் அவர்களின் அரசியல் நாடகத்தை தொடர்ந்து கொண்டு செல்லவேயாகும்.
எமது தாயக மக்கள் பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் வேளையில் எமது தமிழ் அரசியல் தலைமைகள் பொது வேட்பாளர் என்னும் பஞ்சாங்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் பொது வேட்பாளர் எனும் போது பேரம் பேசி தமிழருக்கான தீர்வை பெற முடியும் எனும் போலி விம்பத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அதனை மக்களிடத்தில் நம்ப வைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது தமிழ் மக்கள் இவ்விடயத்தில் சொல்வதற்கெல்லாம் ஆட வேண்டும் என நினைக்கிறார்கள் போலும் இத்தனை காலம் குடிநீர் பிரச்சினைகளுக்கும் யாழ் மக்களுக்கு கிழக்கில் இருந்து நீர் பெற்றுக் கொள்ள ஒற்றுமையுடன் செயற்பட முடியாத எமது தமிழ் தலைமைகளை எவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை சேர்ந்து முன்னிறுத்த போகிறார்கள்?
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை பற்றி இதுவரை எவரும் பேசவில்லை கச்சத்தீவு விவகாரத்தில் எந்த யோசனையும் இல்லை, வாய் திறப்பதும் கூட கிடையாது .ஆனால் இப்போது பொது வேட்பாளர் யோசனை முன் வைத்திருப்பது சாத்தான் வேதம் ஓதிய கதை தான். தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பாக அவர்களுக்குள்ளேயே இன்று வரை ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படவில்லை.பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட போகிறார்கள்?