சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - கண்டுக்கொள்ளாத தமிழ் தலைமைகள்?.....
ஒரு வைத்தியர் வந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கு நடக்கும் இத்தனை ஊழல்களையும் முறைகேடுகளையும் கண்டறிந்துள்ளார். ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது தமிழ் பிரதிநிதிகள் இத்தனை காலமும் எமது மக்களின் இவ்வாறான குறைபாடுகள் பற்றி அறிந்திருக்கவில்லையா?
[2024-07-10 19:05:06] Views:[264]
கடந்த சில நாட்களாகவே சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் நாங்கள் கூற வருவது வைத்தியரானவர் அங்கிருந்து விடைபெறும் இறுதி நாளில் சர்வ மத தலைவர்களை சந்தித்து இருந்தார். அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வருகை தந்திருந்தார். அவரோடும் கலந்துரையாடிய பின்தான் அங்கிருந்து விடைபெற்றார்.
ஒரு வைத்தியர் வந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கு நடக்கும் இத்தனை ஊழல்களையும் முறைகேடுகளையும் கண்டறிந்துள்ளார். ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது தமிழ் பிரதிநிதிகள் இத்தனை காலமும் எமது மக்களின் இவ்வாறான குறைபாடுகள் பற்றி அறிந்திருக்கவில்லையா? இல்லை அறிந்தும் அறியாதது போல் இருந்து விட்டார்களா?
சாவகச்சேரி வைத்தியசாலையில் இவ்வாறு பிரச்சனைகள் இருப்பதே இராமநாதன் அர்ச்சுனன் அவர்களின் வருகையின் பின்னர் தான் நான் எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது எனின் எமது மக்களின் சுகாதார மருத்துவ விடயத்தில் எமது தலைமைகள் எவ்வளவு அக்கறையோடு இருந்துள்ளனர் என்பதை சற்று சிந்தியுங்கள்.? இப்பொழுது இதை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்க நினைத்து விட்டார்கள்.
தற்போது நாடாளுமன்றத்தில் அவ் வைத்தியருக்காக குரல் கொடுப்பது ஒரு போலி நாடகமாக தோன்றுகிறது. நீங்கள் செய்திருக்க வேண்டிய கடமையை அவர் செய்துள்ளார்.இதனை முதலில் கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டியது எமது தமிழ் அரசியல் தலைமைகளே! ஆனால் இவர்கள் இவ்விடயத்தில் தவற விட்டுள்ளனர் . இன்னும் எத்தனயோ விவகாரங்களில் எம்மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி இவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள போகின்றார்கள்?
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆபத்தான நிலைமையில் இருக்கும் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை அனுப்புவதே வழக்கமாக இருந்தது .இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட நீங்கள் சற்று சிந்திக்கவில்லையா? சாவகச்சேரி வைத்தியசாலையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு கணமாவது சிந்தித்திருந்தால் அங்கு என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை அப்போதே நீங்கள் அறிந்திருக்க கூடும். நீங்கள் எவருமே அப்பகுதி நோக்கி செல்லாமையினாலே இன்று பிரச்சினை பூதாகரமாக வெடித்த பின்னர் உங்கள் குரல்களை போலியாக எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
எமது தமிழ் அரசியல்வாதிகள் இருவரை தவிர எவருமே அங்கு சென்று பார்வையிடவில்லை. இவ்வளவு அக்கறையாகத்தான் எமது தமிழ் அரசியல் தலைமைகள் இருந்துள்ளார்களா? தற்போது பாராளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள்? இவை முற்றிலும் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே. இனி இவர்கள் பேசி பயனில்லை. கண் இழந்த பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு??