மாறப்போகும் மலையக கலாசாரம் ?
[2024-07-16 15:00:34] Views:[309] இலங்கையை பொறுத்தவரையில் மலையக சமூகமானது ஒரு தனித்து விடப்பட்ட சமூகம் என்றே கூறலாம். ஏனெனில் அவர்களுக்கான அபிவிருத்தி என்பது பெரும்பாலும் குறைவு . கிராமங்கள் தோட்டப்புறங்கள் எனும்போது பெரும்பாலும் பூரண வசதி படைத்தவையாக அவை இருப்பதில்லை.
மலையகத்தை பொருத்தவரை இன்னமும் பாதுகாப்பான பொருத்தமான இருப்பிடம் என்பது அவர்களுக்கு கிடையாது. ஒரு சில தனி வீடுகள் காணப்பட்ட போதிலும் பெரும்பாலான குடியிருப்புகள் லயன் குடியிருப்புகளே உள்ளன. அதிலும் இடப்பற்றாக்குறையே. என்பது பெரும்பாலும் நிலவுகின்றது. பல தோட்ட பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் முறையான பாதைவசதிகள் இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. வறுமையின் பிடியில் பல குடும்பங்கள் உள்ளன .போதுமான வருமானம் கிடையாது. பெரும்பாலானவர்கள் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் இச்சமூகத்திற்கு இருக்கும் பெரும் ஆறுதலாக அமைவது கல்வி ரீதியாக தன்னை கொஞ்சம் நிலை நிறுத்திக் கொண்டு உயர்வு நிலை அடைந்து வருவது மாத்திரமே ஆகும். ஆனால் அதனை குழப்பும் வகையில் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை இலவச கேபிள் இணைப்பு வசதிகள். அனைவரையும் எந்நேரமும் தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட செய்துள்ளது.
இலவசமாக வழங்க எத்தனையோ விடயங்கள் உள்ளன.மருத்துவ வசதிகள் தேவைப்படுவோர் எத்தனையோ பேர் உள்ளனர் அவர்களுக்கு உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம். இலவச மேலதிக வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம், கற்றல் உபகரணங்கள் வழங்கலாம். ஒரு சில அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இலவசமாக தந்துள்ளது இலவச கேபிள் வசதியும் பயனற்ற இந்திய சினிமாவும்.
இதற்கான காரணம் எமது மலையக கலாசாரத்தை மறக்கச் செய்து இந்திய கலாசாரத்தை எமது சமூகத்தில் திணிக்கும் நோக்கமேயாகும். இந்திய திரைப்பட கலாசார விடயங்களை தொடர்ச்சியாக உள்வாங்குவதனூடாக எமது இளைஞர்கள் சினிமா வாழ்க்கை போன்று தங்களை மோசமான வழியில் கொண்டு செல்லவாய்ப்புள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாள்வெட்டு ஆவா குழுக்கள் போன்ற கலாசாரத்தை எமது சமுதாயத்திலும் திணித்து எமது சமூகத்தையும் வன்முறை நோக்கி தள்ளவே முயற்சித்து வருகின்றனர். இவையனைத்தும் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மேலும் இவையனைத்தும் திட்டமிடப்பட்ட வியாபாரமாகும். இவ்வியாபாரத்திற்கு எமது அரசியல்வாதிகளும் உடந்தையாக செயற்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக எவரும் வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணமும் அதுவே.
இங்கு விழித்துக்கொள்ள வேண்டியது நாம்தான். விளங்கிக்கொள்ளுங்கள். எமது சிந்தனைகளைகூட கட்டுப்படுத்த நினைக்கும் . இவர்களின் நிகழ்கால தந்திர அரசியலைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.