ஜனாதிபதி தேர்தலும் தமிழ் தலைமைகளின் போலி அரசியல் நாடகங்களும்...!!!!
[2024-08-13 20:53:48] Views:[194] இலங்கை அரசியலில் ஒரு மாத காலமாக தமிழ் பொதுவேட்பாளர் யார் என்ற கேள்வியே அனைத்து மூலை முடுக்கெங்கும் கேட்கக் கூடியதாக இருந்தது. தற்போது ஒரு வழியாக அந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வரும் வேளையில் எமது தமிழ் சமூகத்தின் நிலைப்பாடுகள் பற்றி பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் கிளம்பியுள்ள அதே வேளையில் அன்றாடம் புதிது புதிதாக எமது தமிழ் அரசியல் தலைமைகள் கிளப்பி வரும் குழப்பங்களினால் தமிழ் தேசிய அரசியல் என்பது அல்லோல கல்லோலப்படுகிறது.
ஆனால் இவற்றில் ஒன்று மட்டும் தெளிவாகின்றது. எமது தமிழ் மக்களின் வாக்குரிமைகள் அரசியல்வாதிகளினால் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தங்களின் இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்கான தந்திரங்களில் ஒன்றுதான் இப்பொதுவேட்பாளர் சித்தாந்தமுமாகும்.
இவர்கள் தங்களின் குறுகிய கால நோக்கங்களுக்காகவும் தங்கள் பதவிகளின் இலக்குகளை அடைந்துக்கொள்வதற்காகவும் தேர்தல் கால பரப்புரைகளையும் எண்ண வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற போது கிடைக்காத அல்லது சாத்தியமில்லாத சமஷ்டி தீர்வு பற்றிப் பேசுவது வேடிக்கையானது.
ஏன் நேற்று கூட இந்திய இலங்கை கடல் எல்லைகளில் இந்திய மீனவர்கள் அத்து மீறியதாக கூறப்படுகின்றது. தினசரி உயிரை பணயம் வைக்கும் எமது கடற்றொழிலாளர்களுக்காக இதுவரை எவருமே குரல் கொடுக்கவில்லை. இந்திய அரசிடம் இது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எமது தமிழ் தலைமைகள் தயாராக இல்லை.
ஆனால் இப்போது சமஷ்டி தீர்வு வழங்குவதாக உறுதி வழங்கும் வேட்பாளருக்கே எமது ஆதரவு என பழைய பல்லவிகளை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்கள். ஏனைய நாட்களில் அமைதி காத்துவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் இவற்றை தூக்கிப் பிடிப்பது ஏன்?
13ம் திருத்தம் நடைமுறையில் வேண்டுமென்ற அவர்கள் தற்போது கிடைக்காத ஒன்றான சமஸ்டி தீர்வினை வேண்டும் என்கின்றனர். இத்தனை காலமாக மேலோட்டமாக பேசியவர்கள் தற்போது மட்டும் இவ்வளவு தீவிரமாக இதனை முன்வைப்பது தங்களின் அரசியலுக்காக மட்டுமே. தாயகத்தின் விடிவைப் பற்றி பேசுபவர்கள். ஏன் தாயகத்தின் உண்மை நிலையினை வெளிக்கொணர்வதில்லை.
ஜனாதிபதி தேர்தலில் இத்தகைய நிலைப்பாடுகளை முன்வைத்து தங்களை தியாகிகள் போல் காட்டிக் கொள்ளும் எமது அரசியல்வாதிகளின் நோக்கம் எதிர்கால பாராளுமன்ற தேர்தலில் தங்களின் நிலையினை அதாவது தங்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே. தாயகம் பற்றிய கரிசனையோ தமிழ் மக்கள் மீதான அக்கறையோ சிறிதும் கிடையாது. காலம் காலமாக இனவாதம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி வரும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுத்து எம் எதிர்கால சந்ததியினரையும் இருளை நோக்கித் தள்ளவே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் எமது அரசியல் தலைமைகளின் புது புது கருத்தாக்கங்களும் சரி எண்ணக்கருக்களும் சரி கோரிக்கைகளும் சரி அறிக்கைகளும் சரி அனைத்துமே அவர்களின் அரசியல் இலாப நோக்கங்களுக்காக மாத்திரமே தவிர எமது தமிழ் தாயக மக்களுக்கானது அல்ல என்பதே யதார்த்தம்.
இப்போது காலங்கள் மாறிவிட்டன இனியாவது எமது தமிழ் சமூகம் மாற வேண்டும் .இத்தகைய கள்வர்களுக்கு சிறந்த பாடத்தினை கற்பிக்க வேண்டும். எமது வாக்குரிமைகளை வைத்து வியாபாரம் செய்யும் இத்தகைய கள்வர்களை எமது தலைமைகள் என்று சொல்வதற்கு நாம் உண்மையில் தலைகுனிய வேண்டும். இனிவரும் காலங்களிலாவது எமது தமிழ் சமூகம் விழித்துக் கொள்ளுமா பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!