தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள்..!!
[2024-08-23 15:58:16] Views:[201] எமது நாட்டின் தேர்தலுக்கான வேலைகளும் பிரச்சாரங்களும் தற்போது அதிகமாக இடம்பெற்று வருவதால் மக்களின் உண்மையான பிரச்சினைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தற்போது தேர்தல் குடைக்குள் ஒழிந்துக்கொண்டன. எமது தமிழ் தேசிய அரசியலில் எமது தமிழ் தலைமைகளுக்கு ஒன்றை வைத்து இன்னொன்றை மறைப்பதும் மறக்கடிக்க செய்வதும் கைவந்த கலையாகும். இது காலம் காலமாக தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கின்றது.
எமது வடகிழக்கு தாயக உறவுகளும் சரி எனது மலையக உறவுகளும் சரி அன்றாடம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் . ஆனால் தற்போது பிரச்சினைகள் எதுவுமே இல்லாதது போல் தேர்தல் ஒன்றே முக்கியமானது .வேறு எந்த பிரச்சினைகளும் எம்மக்களுக்கு இல்லை என்பதை போன்ற எமது தமிழ் தலைமைகள் காட்டிக் கொள்கின்றனர். ஏனெனில் இவர்களின் இலக்கு.பதவிகளும் சலுகைகளும் மாத்திரமே.
எமது தாயக அரசியல் தலைவர்கள் தேர்தலில் யாருக்கு ஆதரவாளிக்க போகிறோம் என்பதை நீ தீர்மானிப்பதற்காக கட்டம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் கோடிக்கணக்கான பெறுமதியான மீன்வளங்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் பேசுவதற்கோ குரல் கொடுப்பதற்கோ எமது தலைமைகளுக்கு இதுவரையில் நேரமில்லை. எமது மக்களுக்கு சரியாக குடிப்பதற்கான குடிநீர் வசதி கூட இல்லை அதனை கிழக்கிலிருந்து பெற்றுக் கொடுக்க வழி செய்யாத எமது தலைமைகள் தான் தென்னிலங்கையில் இருந்து எமக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகிறார்களா...?
தேர்தலுக்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் தாயகத்தில் வந்து சேர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .அத்தனையும் யார் கையாளுகின்றார்கள்..?
உண்மையில் தாயக மக்களின் மீது அக்கறை இருப்பின் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து சேரும் பணத்தை எமது மக்களுக்காக செலவழிக்கலாம் அல்லது நமது மக்களுக்கு ஏதேனும் அபிவிருத்திகளை செய்து கொடுக்கலாம் .ஆனால் இவர்கள் ஒரு நாளும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் பணத்தை அவ்வாறு மக்களுக்காக பயன்படுத்தியது கிடையாது . அனைத்துமே தங்களின் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு தாயகம், சமஸ்டி , தீர்வு என பொய்யாக நாடகமாடி வருகின்றனர்.
எமது தாயகத்தில் தற்போது போதைப்பொருள் பாவனையும் போதைப்பொருள் கடத்தலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. கொலை கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் தினசரி இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோத மணல் அகழ்வு , கசிப்பு உற்பத்தி போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவோ தாயக தலைமைகளுக்கு நேரமில்லை. இவர்களின் இலக்கு மக்களின் வாக்குகள் மட்டுமே தவிர மக்களின் வாழ்க்கை அல்ல. இந்த சுயநலவாதிகள் இன்னும் கொஞ்ச காலத்தில் தாயகத்தை விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.