தாயக அரசியலும், அதை வழிநடத்தும் புலம்பெயர் உறவுகளும்.!
[2024-10-14 13:00:49] Views:[250] எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலை போன்று புலம்பெயர் உறவுகளின் பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிருக்கும் பல அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர்களின் முதலீடு என்றே கூறலாம். அவர்களின் காலத்திற்கு ஏற்றாற்போல் இங்கிருக்கும் அரசியற்கட்சிகளும் ஆடுவது இயல்பு. எமது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஒரு கற்பனைவாத அரசியல் என்றே கூறலாம்.
எமக்கான அரசியலை தீர்மானிக்க வேண்டியது இந்நிலத்தில் வாழும் தமிழர்களாகிய நாமே தவிர எங்கேயோ ஒரு நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல. இதனை முதலில் நாம் நான்கு உணர வேண்டும்.
மேலும், அவர்கள் தங்கள் முதல்லீட்டில் இலாப நஷ்ட்டம் பார்க்கும் களமாக தமிழர் தாயகத்தை பயன்படுத்துவதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். புலம்பெயர் பணத்திற்காக சமஸ்டி ஆட்சி எனவும் ஒரு நாடு இரு தேசம் எனவும் கோசமிடும் வெற்று அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் இருக்க வேண்டும்.
உண்மையிலேயே புலம்பெயர் உறவுகளுக்கு எமது தாயகத்தின் மீது அக்கறை இருந்தால் எமது தாயக மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக உதவி செய்யலாம். ஏன் போரினால் பாதிக்கப்பட்ட விடுதலைப் போராளிகள் எத்தனையோ பேர் தங்கள் கை, கால்களை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் இன்றும் எந்த ஒரு உதவியுமின்றி தவித்து வருகின்றனர் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். இதனை செய்ய ஏன் எமது புலம்பெயர் உறவுகள் முன் வரவில்லை. எனவே புலம்பெயர் உறவுகளையும் அவர்கள் வழிகாட்டும் அரசியல்வாதிகளையும் நாம் நிராகரிக்க வேண்டிய தருணத்தில் இப்போது உள்ளோம்.
நிலையான அபிவிருத்தி, சமூக பொருளாதார முன்னேற்றம், இன நல்லிணக்கம் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். அரசியல் அனுபவம் உடையவர்கள் எனும் சாயத்தை பூசிக்கொண்டிருக்கும் வயது முதிர் அரசியல்வாதிகளை முழுமையாக ஓரங்கட்ட வேண்டும்.
என்னதான் நாம் ஒற்றுமையாக வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பினாலும் அங்கு சென்ற பின்னர் தங்களின் தனிப்பட்ட நன்மைக்காக எமது மக்களின் நலம் சார்ந்து கூட்டு தீர்மானம் எடுக்க மாட்டார்கள். அவர்களின் சுயநலம் பதவியை தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் முழு முயற்சியாக உழைப்பார்கள்.
இத்தகைய போலிய அரசியல்வாதிகளையும் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு எம் சமூகத்தை தவறாக வழி நடத்துபவர்களையும் நாம் தூக்கி எறிய வேண்டும் இளைய சமுதாயத்தின் கையில் தாயக அரசியலை ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. எனவே அதற்கான கிடைத்துள்ள வாய்ப்பை இத்தருனத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.