யாழில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது!
[2025-05-21 10:11:43] Views:[114] யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற பல்வேறு துவிச்சக்கர வண்டி திருட்டுக்களை மேற்கொண்ட சந்தேகநபரை யாழ். மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரயே யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் பதில் கடமை பொறுப்பதிகாரி விஜய ராஜா மற்றும் குழுவினர் கைது செய்தனர்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து ஒரு துவிச்சக்கர வண்டியும் அவரின் உடமையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபரினால் 23 மாதங்களாக நல்லூர், யாழ். நகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து திருடப்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் ஐந்து துவிச்சக்கர வண்டிகளும் பெண்கள் உபயோகிக்கும் 11 துவிச்சக்கர வண்டிகள் அடங்கலாக 16 துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் இருப்பின் தகுந்த அடையாளங்களை காண்பித்து துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.