ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன!!
[2025-06-02 10:42:00] Views:[137] இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கொவிட் 19 தொற்று தொடர்பில் தற்போது பரவிவரும் பல்வேறு தகவலின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய இரண்டு சுற்றுநிருபங்களை விரைவில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினரை இலக்காகக் கொண்டு குறித்த சுற்றுநிருபங்கள் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் இரண்டு உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில் ஒமிக்ரோன் கொவிட்-19 வைரஸின் இரண்டு திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
கோவிட் பாதிப்புகளில் தற்போது எந்த அதிகரிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்தநிலையில், சுகாதாரத் துறையினர், உலகளாவிய மற்றும் உள்ளூர் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஒமக்ரோனின் துணை வகையைச் சேர்ந்த இந்த மாறுபாடு முதன்முதலில் ஜனவரி 2025இல் அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் பல நாடுகளில் கண்டறியப்பட்டது.
தொண்டை புண், காய்ச்சல், இலேசான இருமல், சோர்வு, தசை வலி போன்றவை இதற்கான அறிகுறிகளான இருக்கும். இதேவேளை, இந்த புதிய மாறுபாடு முன்னரைப் போன்று கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.