புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்:
[2025-06-06 19:25:24] Views:[91] புலிகளின் வைப்பகத்திலிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மக்களின் நகைகளை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக காவல்துறை திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க நகைகள் யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
நகைகளை உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், மக்கள் அவற்றை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகும், அப்போது அத்தாட்சிப் பத்திரங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு பெறப்படாமல் சில நகைகள் மின்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை வடக்கு அபிவிருத்தி நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதில் வைப்பிலிடப்படும்.
அதில் அரசாங்கத்தாலும் ஒரு தொகை வைப்பிலிடப்படும். புலம்பெயர் தமிழர்களும் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்புக்களை வழங்கலாம்.
குறித்த நிதியத்தினூடாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.