நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகினார் பிரதி அமைச்சர் ஹர்ஷன.! வழங்கப்படவுள்ள புதிய பதவி!!
[2025-06-21 10:57:50] Views:[88] நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த பதவி விலகல் 2025.06.20ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போதைய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.
அதன்படி, பிரதி அமைச்சரின் பதவி விலகலை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கிடையில், நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.