யாழ். மாவட்ட அரச அதிபராக சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற எம். பிரதீபன்
[2025-06-25 11:51:55] Views:[83] யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக அமைச்சரவை அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று (24) யாழ். மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீ மோகன் கைலாகு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.