உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்டாயமாக்கப்படும் நடைமுறைகள்;
[2025-03-09 09:58:15] Views:[143] உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் 10 சதவீதம் பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
அதேநேரம், 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட 25 சதவீதம் இளைஞர்களுக்கு வேட்புமனுவில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அதேநேரம், புதிய கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கமைய, சகல வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.