கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்.
[2025-03-14 11:19:14] Views:[74] கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஆலயத்துக்குச் செல்லவுள்ள பக்தர்களுக்கு இன்று காலை 4 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கான படகு சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கு குழுவாக/ தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை இரண்டு பிரதிகளில் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு உணவு மற்றும் சனிக்கிழமை காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.