தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை தண்டனை! மீனவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை;
[2025-03-20 10:31:47] Views:[82] அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டிகள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (19) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, படகோட்டிகள் இருவருக்கும் தலா 06 மாத சிறைத்தண்டனையும், தலா 4 மில்லியன் ரூபாய் தண்டபணமும் விதித்த மன்று, தண்ட பணம் செலுத்த தவறின், 03 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
குறித்த இரண்டு படகுகளிலும் இருந்த நான்கு கடற்தொழிலாளிகளையும் கடுமையாக எச்சரித்த மன்று, 06 வருட காலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து அவர்களுக்கு பிணை வழங்கியது.